29 மே 2017

கலைஞர் மு.கருணாநிதி-பாரத ரத்தினம்!

மரியாதைக்குரியவர்களே,
              வணக்கம்.  முகநூல் நண்பர் திரு.அபிஅப்பா என்கிற தொல்காப்பியன் அவர்களின் கட்டுரை தங்களது கவனத்திற்காக...
பொதுவாக இந்திய ஜனாதிபதி தான் (அஃப்கோர்ஸ் மத்திய அமைச்சரவை முடிவு செய்தாலும்) "பாரத்ரத்னா" விருதுக்கு உரியவரை தேர்ந்தெடுக்கும் கையெழுத்து போட வேண்டிய ஆசாமி. ஆனால் அந்த ஆசாமியையே பல முறை தேர்ந்தெடுத்தவர் அகில இந்திய அளவில் தன் ஆளுமையால் தேர்ந்தெடுத்தவர் கலைஞர் அவர்கள் தான். அதே போல "பாரத்ரத்னா" விருதுக்கு ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்யும் முக்கிய பதவியான "பிரதமர்" அவர்களையே பல முறை தேர்ந்தெடுத்த ஆளுமை கொண்டிருந்தவர் கலைஞர் அவர்கள். உடனே சில தோழர்கள் ..மாற்றுக்கட்சி தோழர்கள் "வாயாலயே வடை சுட வேண்டாம். கலைஞர் எப்போது ஜனாதிபதியை தேர்ந்தெடுத்தார் " என மனம் போன போக்கில் எழுதலாம். இதோ கலைஞர் அவர்களின் ஆளுமையை பாருங்கள். இந்தியாவின் 8 பிரதமர்கள், 7 குடியரசு தலைவர்களை உருவாக்கிய தலைவர் கலைஞர் அவர்களின் ஆளுமையை "திரும்பிப்பார்" என்னும் தலைபில் என் வலைப்பூவில் செப்டம்பர் 13, 2011ல் எழுதிய கட்டுரையில் இருந்து சில வரிகளை எடுத்து இங்கே தருகின்றேன். படியுங்கள் தோழர்களே!
\\ 1957ல் கலைஞர் உட்பட 15 பேர் சட்டமன்றத்தில் காலடி எடுத்து வைத்தாகிவிட்டது. குடியரசு தலைவர் தேர்தல் வருகின்றது. எப்போதும் போல வடநாட்டவர் போட்டி. வடக்கு வாழ்கின்றது. தெற்கு தெய்கின்றது என்கிற மனக்கிலேசம் தென்னகத்தில் பரவலாக இருந்த நேரம் அது. அண்ணாவின் தலைமையில் கூடிய சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் ஜனாதிபதி தேர்தலில் ஓட்டு போடுவதில்லை என முடிவெடுக்கின்றது. ஆனால் அப்போதைய மத்திய அரசுக்கு பிராந்திய கட்சிகளின் ஆதரவு ஒரு பொருட்டல்ல. அவர்களை மதிப்பதும் இல்லை. ஆனால் பிற்காலம் எப்படி ஆகும் என்று அவர்களுக்கு அப்போது கணிக்க தெரியவில்லை, கணிக்க வேண்டிய அவசியமும் நேருவுக்கு நேரவில்லை அப்போது.
ஆனால் எழுபதுகளின் ஆரம்பத்தில் குடியரசு தலைவராக இருந்த ஜாகீருசேன் மறைவையொட்டி நடக்க இருந்த குடியரசு தேர்தலில் திமுகவும் , கலைஞரும் அந்த தேர்தலில் குடியரசு தலைவரை தேர்ந்தெடுக்க முக்கிய ஆளுமையாக இருந்தனர் என்பதை தான் சொல்ல வருகின்றேன்.
மத்தியில் ஆளும் கட்சி காங்கிரஸ் கட்சி. அவர்கள் கை காட்டும் வேட்பாளர் வெற்றி பெற அதிக வாய்ப்பு இருந்தது. ஆனால் வழக்கம் போல அவர்களுக்குள் சண்டை. பாபுஜெகஜீவன்ராம் அதாவது இப்போதைய நாடாளுமன்ற சபாநாயகர் மீராகுமாரின் தந்தையார் தலித் இனத்தை சேர்ந்தவர் குடியரசு தலைவராக வேண்டும் என்பது இந்திராகாந்தியின் சாய்ஸ். ஆனால் காங்கிரஸ் தலைவர் நிஜலிங்கப்பா தன் தென்னிந்தியாவை சேர்ந்த நீலம் சஞ்சீவரெட்டியை ஜனாதிபதியாக ஆக்க வேண்டும் என பிடிவாதம்.
பிரச்சனை என்று வந்தாகிவிட்டது. கட்சிக்குள் ஓட்டெடுப்பு நடத்தி யார் வேட்பாளர் என முடிவு செய்யலாம் என காங்கிரசின் ஆட்சிமன்ற கூட்டம் நடந்து ஓட்டெடுப்பும் நடந்து நிஜலிங்கப்பாவின் ஆதரவு பெற்ற நீலம்சஞ்சீவரெட்டி தேர்வானார். அது வரை எல்லாம் நல்லா தான் போய்கொண்டு இருந்தது. கலைஞர் ஜனாதிபதியை தேர்ந்தெடுத்த ஆளுமை தெரியாதவர்களே! நன்றாக கேளுங்கள், அந்த நேரத்தில் தான் கலைஞர் மூக்கை நுழைக்கிறார். தென்னிந்தியாவை சேர்ந்த ஒருவர் நீலம் சஞ்சீவரெட்டி ஜனாதிபதி ஆவது ஒரு சந்தோஷம் தான். ஆனாலும் அதிலும் குறிப்பாக தமிழும் தெரிந்த ஒருவர் ஜனாதிபதி ஆனால் என்ன என்கிற ஆர்வம் கலைஞரை ஒரு பிராந்தியகட்சியின் தலைவர், பிராந்திய கட்சியை சேர்ந்த முதல்வர் அங்கே இந்தியா சுதந்திரம் அடைந்து 25 ஆண்டு ஆன பின்னே ஒரு பிராந்திய கட்சி ,மாநில கட்சி முதன் முதலாக ஜனாதிபதி தேர்வில் தன் ஆளுமையை செலுத்த தொடங்கியது. யார் ? கலைஞர்!
அப்போது துணை ஜனாதிபதி மற்றும் ஆக்டிங் ஜனாதிபதியாக இருந்த வி.வி.கிரி தான் போட்டியிட போவதாக அறிவிக்கிறார். ஒரு மனதாக தேர்ந்தெடுக்க வேண்டிய பதவி இப்போது தேர்தல் என்னும் நிலைக்கு தள்ளப்பட்டது. எதிர்கட்சிகள் ஒன்று கூடின. பலரும் பல கருத்துகளை சொல்ல கலைஞர் ஜெயப்ரகாஷ்நாராயணன் நிற்கட்டும் என்கிறார். இப்படியாக எல்லோரும் கூடிக்கூடி பேசுவது காங்கிரஸ் வேட்பாளர் நீலம் சஞ்சீவரெட்டிக்கு சாதகமாக அமையகூடிய சூழல். காலம் கடந்து போய் கொண்டிருந்த நேரத்தில் திடீரென கலைஞர் ஒரு அறிவிப்பு செய்கின்றார். திராவிட முன்னேற்ற கழகம் ஜனாதிபதி தேர்தலில் வி. வி. கிரி அவர்களை ஆதரிக்கும் என்று.
ஆக தேர்தலில் மந்திய ஆளும் கட்சி சார்பில் நீலம் சஞ்சீவரெட்டியும் எதிர்கட்சிகள் சார்பாக வி.வி. கிரியும் வேட்பாளர்கள். அப்போதைய பாஷையில் சொல்லப்போனா அபேட்ஷகர்கள். இந்திரா ஒரு அறிவிப்பு செய்தார் புத்திசாலித்தனமாக. கொறடா உத்தரவு போட மாட்டார். தங்களுக்கு இஷ்டமானவர்களுக்கு ஓட்டு போடலாம் என தன் கட்சிகாரர்களுக்கு உத்தரவு போடப்படுகின்றது. தேர்தல் முடிந்தது. வி.வி.கிரி வெற்றி பெற்று குடியரசுதலைவர் ஆகின்றார். தமிழ் தெரிந்த ஒருவர் ஆகின்றார். முதல் நன்றியே கலைஞருக்கு தான் சொல்கின்றார்.
ஆக அந்த குடியரசு தலைவர் தேர்தலில் கலைஞரின் ஆளுமை இருந்ததா இல்லியா? முதன் முதலாக மாநிலகட்சி ஒரு குடியரசு தலைவர் தேர்தலில் மூக்கை நுழைக்க வைத்தவர் கலைஞரா இல்லியா? ஆளும் மத்திய அரசின் வேட்பாளரை தோற்கடித்து எதிர்கட்சி வேட்பாளர் வி வி கிரி அவர்களை ஜனாதிபதி நாற்காலியில் அமரவைத்தவர் கலைஞரா இல்லியா?
அதன் பின்னர் நீலம் சஞ்சீவரெட்டி ஜனாதிபதியாக ஆனார். அதற்கு அவருக்கு கலைஞரின் உதவி தேவைப்பட்டது. கலைஞருக்கு கடிதம் எழுதினார். ஆதரவு கொடுக்கப்பட்டது. பின்னர் அவருக்கு பதவி காலம் முடிவடையும் போது அடுத்த ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க வேண்டிய நிலை வந்த போது இந்திராவின் அழைப்பினை ஏற்று டெல்லி சென்றார் கலைஞர். அப்போது இந்திராவின் மனதில் இருந்த இருவர் ஆர். வெங்கட்ராமன் மற்றும் நரசிம்மராவ். நரசிம்மராவ் வேண்டாம் என கலைஞர் மறுத்த காரணம், ஏற்கனவே பதவில் இருந்து வருபவர் ஆந்திராவை சேர்ந்தவர், மீண்டும் ஆந்திராவை சேர்ந்தவர் வந்தால் வடநாட்டவர்களின் ஒட்டு மொத்த வெறுப்பும் தேவையில்லாமல் தாங்க வேண்டும், அதே போல ஆர்.வெங்கட்ராமன் வருவதிலும் கலைஞருக்கு ஒரு சதவிகிதம் கூட ஆர்வம் இருக்காது. அதற்கான காரணம் 1980 சட்டசபை தேர்தலில் திமுகவின் தோல்விக்கு ஆர்.வெங்கட்ராமைன் பொறுப்பற்ற பேச்சுகள் என்று மனதில் நினைப்பு. ஆனால் அதை காரணமாக இந்திராவிடம் சொல்லாமல் பிரதமராகிய நீங்களும் உயர்சாதி, ஆர்.வெங்கட்ராமனும் உயர்சாதியாக இருப்பதால் மக்களிடம் ஒரு வித இறுக்கம் தென்படும் , எனவே பொற்கொல்லர் வகுப்பை சேர்ந்த கியானிஜெயில்சிங் ஒரு சிறுபான்மை மதத்தையும் சேர்ந்திருப்பதால் அவரையே குடியரசு தலைவர் ஆக்கலாம் என சொல்லி அதற்கு திமுக, அதிமுக என ஆதரவும் கொடுத்து ஜனாதிபதியாக்கினார். பின்னர் ஆர்.வெங்கட்ராமன் ஜனாதிபதி ஆன பின்னே இந்தியாவுக்கு பிடித்த பீடையாக பல கெட்டகாரியங்கள் நடந்தன என்பதும் வரலாறு. கலைஞர் முன்பு ஆர்.வெங்கட்ராமனை ஜனாதிபதியாக ஆக்காமைக்காக தன் நன்றிக்கடனை கூட ஒரு ஹிண்டுவில் வந்த வாசகர் கடிதத்தை வைத்தே திமுக ஆட்சியை கலைத்து தன் மனக்காயத்துக்கு மருந்து போட்டுக்கொண்டார் என்பதும் வரலாறு.
ஆக கலைஞரின் ஆளுமைகள் இந்திய அரசியலில் இருந்ததா இல்லையா என்பதை சும்மா சிரித்து வைப்போமே என சிரித்து வைப்பவர்களை விட சரித்திரம் அறிந்து கொள்ள ஆர்வமாய் இருப்பவர்களுக்காக எழுதி வைத்தோம் என்னும் மனதிருப்தியுடன் எழுதுகிறேன். \\
இது தான் கலைஞர் அவர்கள் ஜனாதிபதிகளை உருவாக்கிய வரலாறு. வி பி சிங் முதல், ஐ கே குஜ்ரால், தேவகவுடா என இவர் பிரதமர் ஆக்கிய வரலாறுகளும் உண்டு.
சமகால தோழர் பேராசிரியருடன் தலைவர் கலைஞர்
அரசியல் ஆளுமைகள் மட்டுமா கலைஞரிடம் இருந்தது. கலைத்துறை என எடுத்துக்கொண்டால் நாடகம், சினிமா, கதை, கவிதை, கட்டுரை, கவிதைகள், உரைவீச்சுகள், மேடைப்பேச்சுகள் என பட்டியல் போட்டு மாளாது.
அரசியல் பதவிகள் எனில் தமிழக சட்டமன்ற உறுப்பினர் 1957 – 1962
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் 1962 – 1967
பொதுப்பணித்துறை அமைச்சர் தமிழ்நாடு அரசு 1967 – 1969
தமிழக முதலமைச்சர் 1969 – 1971
இரண்டாவது முறையாகத் தமிழக முதலமைச்சர் 1971 – 1976
தமிழக சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவர் 1977 – 1983
தமிழக சட்ட மேலவை உறுப்பினர், எதிர்க்கட்சித் தலைவர் 1984 – 1986
மூன்றhம் முறையாகத் தமிழக முதலமைச்சர் 1989 – 1991
நான்காம் முறையாகத் தமிழக முதலமைச்சர் 1996 – 2001
ஐந்தாம் முறையாகத் தமிழக முதலமைச்சர் 2006 - 2011
அதன் பின்னர் இப்போது திருவாரூர் சட்டமன்ற உறுப்பினராக தொடர்கிறார் தன் 92 வது வயதிலும்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் கலைஞரின் பங்கு என்பது கீழ்க்கண்ட தொகுதிகளில் இருந்து .......
குளித்தலை 1957-62
தஞ்சாவூர் 1962-67
சைதாப்பேட்டை 1967-71
அண்ணாநகர் 1977-76
அண்ணாநகர் 1977-80
அண்ணாநகர் 1980-83
சட்ட மேலவை உறுப்பினர் 1984-1986
துறைமுகம் 1989-91
துறைமுகம் 1991
சேப்பாக்கம் 1996-2001
சேப்பாக்கம் 2001-2006
சேப்பாக்கம் 2006 லிருந்து
திருவாரூர் 2011லிருந்து இப்போது தன் 92 வது வயது நடக்கும் போதும் தொடர்கின்றார்.
(திருவாரூர் 2016லிருந்து இப்போது தன் 94 வது வயது நடக்கும் போதும் தொடர்கின்றார்)
இதோ இந்த வயதிலும் போராட்டம் எனில் முதல் ஆளாக தன் சக்கர நாற்காலியில் சென்றும் கலந்து கொள்கின்றார்.
தலைவர் கலைஞர் அவர்கள் சிறைக்கு அதாவது மக்கள் போராட்டங்களுக்காக ...கவனிக்கவும் சிலரைப்போல ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக இல்லை.... இல்லவே இல்லை... சமூக போராட்டங்களுக்காக 500 நாட்களுக்கு மேலாக சிறை சென்றுள்ளார். இப்போது அகில இந்திய அளவில் வாழ்ந்து கொண்டு இருக்கும் அரசியல் தலைவர்களில் எத்தனை பேர் இப்படி 500 நாட்களுக்கு மேலாக சிறையில் இருந்துள்ளனர் என "பக்கத்து இலைக்கு பாயசம் கேட்கின்றார் கலைஞர்" என ஏளனம் பேசுவோர் விரல் விட்டு சொல்லட்டும் பார்க்கிறேன்! இது சவால்! எத்தனை அரசியல்வாதிகள், எத்தனை சமூக சிந்தனாவாதிகள் இவரைப்போல 500 நாட்களுக்கு மேலாக சிறையில் இருந்துள்ளனர்... சொல்லட்டும் பார்க்கலாம்.
கோடிக்கணக்கான ரசிகர்கள்
70 ,00,000 கிலோமீட்டருக்கும் அதிகமான பயணங்கள்
80,000 மணிநேரத்துக்கும் அதிகமான உரைவீச்சுக்கள்
1000 த்துக்கும் மேற்பட்ட உடன்பிறப்பு கடிதங்கள்
1000 த்துக்கும் மேற்பட்ட எழுத்தோவியங்கள்
500 நாட்களுக்கும் அதிகமான சிறைவாசம்
75 திரைப்படங்கள்
72 ஆண்டுகால பொது வாழ்க்கை
70 ஆண்டுகாலமாக பத்திரிகையாளர்
65 ஆண்டுகால கலைத்துறை பங்களிப்பு
60 ஆண்டுகால வரலாற்றில் தொடர்ச்சியான தேர்தல் வெற்றி
50 ஆண்டுகாலமாக சட்டசபை பணிகள்
18 ஆண்டுகாலம் தமிழக முதல்வர்
இந்தியாவின் 8 பிரதமர்கள் 7 குடியரசு தலைவர்களை உருவாக்கியதில் அரசியல் ஆளுமை
3 தமிழின் நாயகன்
என்றும் தமிழினத்தின் தலைவர்
ஒரே கலைஞர் ... இவருக்கு "பாரத்ரத்னா" கொடுக்காமல் வேறு யாருக்கு கொடுப்பது? இதோ "ராஜபக்ஷெ"வுக்கு "பாரத் ரத்னா"கொடுக்க வேண்டும் என கொக்கரிக்கும் சுப்ரமணிய சுவாமிகளின் பேச்சுகளுக்கு கண்டனம் கூட தெரிவிக்காத சிலர் கலைஞருக்கு "பாரத்ரத்னா" கொடுப்பதை கேலி பேசுவது வெட்கக்கேடான விஷயம்.
தலைவர் கலைஞர் அவர்கள் ஐந்து முறை தமிழக முதல்வராக இருந்த போது ஆற்றிய பணிகள், சமூக பணிகள் பற்றிய பெரிய கட்டுரை கூட எழுதினேன். அதை எல்லாம் இங்கே இந்த பதிவில் சொன்னால் படிப்பவர்களுக்கு அயற்சியாகவும், கலைஞருக்கு பாரத்ரத்னா கொடுக்க வேண்டும் என சொன்னதை கேலி பேசியவர்களுக்கு அதிர்ச்சியாகவும் இருக்கும்.
கலைஞருக்கு "பாரத்ரத்னா" கொடுக்க அவரது அரசியல், கலை, இலக்கிய, சினிமா, எழுத்து, மேடைப்பேச்சு என எத்தனையோ துறைகள் இருப்பினும் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என்னும் மாபெரும் புரட்சியை தமிழகத்தில் செய்து பசியில்லா பெருவாழ்வை தமிழகமக்களுக்கு கொடுத்த சமூக புரட்சி ஒன்றுக்காகவே அவருக்கு "பாரத்ரத்னா" கொடுக்கலாம். உடனே நீங்கள் கேட்கலாம்... "இப்போது விலையில்லா அரிசி கொடுக்கப்படுகின்றதே" என்று. இல்லை... அதை அப்படி எடுத்துக்கொள்ளக்கூடாது. "விலையில்லா அரிசி "என்பது மக்கள் அரிசி வாங்கக்கூட நாதியற்றவர்கள் என்பதாக உலகுக்கு உணர்த்தும். ஒருவன் தான் சாப்பிடும் உணவை தான் காசு கொடுத்து வாங்க வேண்டும் என்கிற சுயமரியாதையை தகர்க்கும் விஷயம் அந்த "விலையில்லா அரிசி" என்பது. குறைந்த பட்சம் ஒரு கிலோ ஒரு ரூபாய் என்பது தான் காசு கொடுத்து வாங்கி உணவு உண்ணும் திருப்தியும் சுயமரியாதையும் உண்டாகும் அந்த பயனாளிக்கு. ஆகவே ஒரு ரூபாய் ஒரு கிலோ அரிசி என்னும் அந்த சமூகப்புரட்சி என்கிற ஒரு காரணம் போதும் கலைஞருக்கு "பாரத்ரத்னா" விருது கொடுக்க!
கலைஞருக்கு "பாரத்ரத்னா" இன்னும் கொடுக்கப்படவில்லை எனில் அசிங்கம் கலைஞருக்கு இல்லை. இந்த தேசத்துக்கு தான் அசிங்கம். அந்த அசிங்கம் துடைக்கப்பட வேண்டும் எனில் அடுத்த வருடமாவது கலைஞருக்கு "பாரத்ரத்னா" வழங்கப்பட வேண்டும். இது ஒரு திமுக தொண்டனின் குமுறல் இல்லை. ஒட்டு மொத்த திராவிட இனத்தின் குரல். அதே போல மிகப்பெரிய சமூக மாற்றத்தை இந்தியாவில் விதைத்து விட்டு சென்ற தந்தை பெரியார் அவர்களுக்கும், திராவிட இனத்தை ஆட்சிக்கட்டிலில் அமர வைத்து அழகுபார்த்த "அறிஞர் அண்ணா" அவர்களுக்கும் ஆக தமிழகத்தின் விடிவெள்ளிகள் "தந்தை பெரியார்", "அறிஞர் அண்ணா" , "கலைஞர்" ஆகியோர்களுக்கும் இந்த மும்மூர்த்திகளுக்கும் ஒரே நேரத்தில் அடுத்த வருடமே "பாரத்ரத்னா" விருது வழங்கி இந்திய அரசு தன்னைத்தானே பெருமைப்படுத்திக்கொள்ள வேண்டும்!
மீண்டும் சொல்கிறேன்... இது ஒரு அபிஅப்பா என்கிற தொல்காப்பியன் என்னும் சாதாரன திமுக தொண்டனின் குமுறல் இல்லை. ஒட்டு மொத்த திராவிட இனக்குரலின் எதிரொலி.....
 நன்றி; http://abiappa.blogspot.com/2014/12/blog-post_27.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சதுரங்கம் வாழ்க்கைக்கு தரும் பாடம்.

  ஒவ்வொரு அசைவும் முக்கியமானது. ஆட்டத்தில் மட்டுமல்ல வாழ்க்கையிலும். வாழ்வில் நாம் செய்யும் ஒவ்வொரு நிகழ்வையும் மிகவும் கவனமாக செயல்படுத்த வ...