09 மே 2015

கிரீன் டீ,பிளாக் டீ,ஒயிட் டீ,ஹெர்பல் டீ,லெமன் டீ, குடித்திருக்கிறீர்களா?

                          தேநீரில் பலவகை ஒவ்வொன்றும் ஒரு வகை..
மரியாதைக்குரியவர்களே,
               வணக்கம்.  கொங்குத்தென்றல் வலைப்பதிவுக்கு  அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.டீ என்னும் தேநீர் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.

 
                       விருந்தினர் வந்தால் உடனே அவருக்கு ஒரு கப் டீ தயாரித்து வழங்குகிறோம். ஏன்? தயாரிப்பது எளிதானது. சூடானது. ருசியானது. சரியாக, அளவோடு பயன்படுத்தினால் ஆரோக்கியமானது. அதனால்தான் ஒரு கப் டீ கொடுத்து எல்லோரையும் உபசரிக்கிறோம். அன்பு பாராட்டுகிறோம். டீயில் பல வகைகள் இருக்கின்றன.

                        டீ தூளை உபயோகிக்காமல் அதிக நாட்கள் வைத்திருந்தால் அதில் வாயு ஏற்றம் அதிகம் ஏற்பட்டு, பிளாக் டீ ஆகிறது. அதைத்தான் நாம் அதிகம் பயன்படுத்துகிறோம். வாயு ஏற்றம் இல்லாமல் இலையில் இருந்து எடுக்கப்படுவது கிரீன் டீ. அதில் அதிகமாக ஆன்டி ஆக்சிடென்ட் இருக்கிறது.

                     தேயிலை செடியின் முதல் மொட்டில் இருந்து தயாரிக்கப்படுவது, ‘ஒயிட் டீ’ எனப்படுகிறது. அதன் விலை மிக அதிகம். பயணத்தின்போது எல்லா இடங்களிலும் எளிதாக கிடைப்பது, இன்ஸ்டன்ட் டீ. வனிலா, ஏலக்காய், பழவகைகளின் மணத்தில் இந்த டீ கிடைக்கிறது. இதில் பால்பொடியும் சேர்ந்திருக்கும்.

                  பலவகை மூலிகை செடியின் இலைகள், பூக்கள், காய்கள், வேர்கள், பட்டைகள் போன்றவைகளில் இருந்து தயாரிக்கப்படுவது ஹெர்பல் டீ. இது அதிக உற்சாகம் தரத் தகுந்தது. கிரீன் டீயில் நிறைய சிறப்பம்சங்கள் உள்ளன. அதில் இருக்கும் ஆன்டி ஆக்சிடென்டுகள், வைட்டமின்கள் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தரும்.

                 சிலருக்கு இந்த டீ உடல் எடையை குறைக்கும் மருந்துபோலவும் செயல்படுகிறது. குடல் தொடர்புடைய நோய்களை குறைக்கும். பற்களை பலப்படுத்தவும், ரத்த அழுத்தத்தை கட்டுக்குள்வைக்கவும் சில நேரங்களில் துணைபுரியும். ரத்தத்தில் இருக்கும் கொழுப்பை இது குறைப்பதால் இதயத்திற்கு ஏற்றது.

                 நல்ல டீ தயாரிப்பது எப்படி தெரியுமா? டேஸ்ட்டாக நீங்கள் ஒரு கப் டீ தயாரித்து பருக வேண்டும் என்றால், முதலில் கவனிக்கத் தகுந்தது, நீரின் சூடு. நீரை சூடாக்கி நீங்கள் டீ தூளை போட்டு இஷ்டத்திற்கு கொதிக்க வைத்துக்கொண்டே இருந்தால், அதில் இருக்கும் அனைத்து சத்துக்களும் விரயமாகி விடும். நீர் நன்றாக சூடாகி கொதிக்கும் முன்பே தீயை அணைத்துவிடுங்கள்.

                   தேவையான அளவு டீ தூள் சேர்த்து பாத்திரத்தை அடைத்துவைத்துவிடுங்கள். நீர் எவ்வளவு சூடாகவேண்டும் என்பது தேயிலைக்கு தக்கபடி மாறும். நீரில் போட்டு எவ்வளவு நேரம் மூடிவைக்கவேண்டும் என்பதும் உபயோகப்படுத்தும் டீ தூளுக்கு தக்கபடி மாறும். கிரீன் டீ என்றால் 60 டிகிரி செல்சியஸ்க்கு சூடாக்கி, அதில் டீ தூளைக்கொட்டி 1 முதல் 3 நிமிடங்கள் வைத்திருந்தால்போதும்.

               ஒயிட் டீக்கு 85 டிகிரி செல்சியஸ் சூடும் 4 முதல் 8 நிமிடமும் தேவை. பிளாக் டீக்கு 100 டிகிரி செல்சியஸ் சூடும், 3 முதல் 5 நிமிடமும் தேவை. நீங்கள் சுவையாக, ஆரோக்கியமாக ஒரு கப் டீ பருகவேண்டும் என்றால், அதை தயாரிப்பதற்கு முன்னால் இதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

                  டீயை தயார் செய்வதற்கு முன்னால் அதில் பால் சேர்த்தால் அதில் இருக்கும் புரோட்டீன் தன்மையில் மாற்றம் ஏற்பட்டு டீயின் சுவை குறைந்துவிடும். தூளைக்கொட்டி டீ தயாரித்த   பின்பு, பால் சேர்த்தால்போதும். சில டீக்கடைகளில் கைதேர்ந்த டீ மாஸ்டர்கள் இரு கப்பில் டீயை வைத்து வெகு உயரத்துக்கு கொண்டு சென்று ஊற்றி ஊற்றி நுரை ஏற்படுத்துவார்கள்.

                      அது வேடிக்கையான விஷயம் அல்ல. அவ்வாறு ஊற்றி ஆற்றுவது, டீயின் சுவையை அதிகரிக்கச் செய்யும் முயற்சியாகும். சூடாக ஒரு கப் டீ குடித்தால், சோர்வு நீங்கி உற்சாகம் பிறக்கும் என்பது உண்மைதான். ஆனால் அதிகமாக பருகினால் அதிக உற்சாகம் கிடைக்காது. டீ அதிகம் பருகினால் பின் விளைவுகள் ஏற்படும்.

                முதலில் அதில் சில மூலக்கூறுகள் ஜீரணத்தன்மையை பாதிக்கும். அதனால் பசி தோன்றாது. நெஞ்சு எரிச்சல், புளித்த ஏப்பம், அல்சர் இருப்பவர்கள் டீயின் அளவை வெகுவாக குறைக்கவேண்டும். கிரீன் டீயை அதிகமாக பருகினால் பல்லும், எலும்பும் பாதிக்கும் சூழல் உருவாகும். உடலில் இருக்கும் இரும்புச் சத்தும் குறையும். அளவோடு பருகினால் டீ உற்சாக பானம். அளவுக்கு அதிகமானால் அதுவும் உபத்திரவம்தான்!  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முனைவர்.இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phil.,Ph.D., அவர்களது வாழ்க்கைக்குறிப்பு... (Dr.R.K.Manikkam, professor,Writer)

                                                                                                        முனைவர். இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phi...