11 ஜூன் 2014

பனைமரம்

மரியாதைக்குரியவர்களே,
  வணக்கம்.
கற்பகதரு - பனைமரம்
------------------------------------

பழந் தமிழரின் வாழ்வோடு பின்னிப் பிணைந்த பனை மரத்தை அதன் முழுப் பயன் கருதி "கற்பகதரு" என்பர். பனையின் பயன் பற்றி
அறியாதிருக்கும் சிலர் அதனை அறிந்து கொள்வதற்காக இதோ..........

பனை மரம் ஒரு இயற்கை வளம். இலங்கை, மற்றும் இந்தியாவில் காணப்படும் பனை மர இனத்தை Borassus flabellifer L. என்றும், 
ஆப்பிரிக்காவில் காணப்படும் பனை இனத்தை Borassus aenthipoum Mart. என்றும் அழைப்பர். உலக அளவில் அண்ணளவாக 140 மில்லியன் பனைமரங்கள் இருப்பதாக அறியப்பட்டுள்ளது.

● பனையின் பயன்கள் :-
(1) பனை ஓலை:
குருத்து:-
வட்டுப் (தலை) பகுதியின் மிக இளம் மிருதுவான ஓலை மற்றும் மட்டைப் பகுதிகளை குருத்து என்பர்; இது இனிப்புச் சுவையுடன் மிக ருசியாக இருக்கும். குருத்து ஓலையானது கைவினைப்பொருட்களான பூக்கள், பூச்சாடிகள் போன்றவற்றையும் நாளாந்த பாவனைப்பொருட்களான பெட்டி, சுளகு, பாய், கடகம், திருகணை, நீத்துப்பெட்டி, இடியப்ப தட்டு போன்றவற்றையும் செய்யப் பயன்படுகிறது.

அத்துடன் காகிதங்கள் கண்டுபிடிப்பதற்கு முன்னர் எழுத்து வடிவங்கள் எழுதுவதற்கும், நூல்கள் எழுதுவதற்கும், ஏட்டுச் சுவடிகள் எழுதுவதற்கும் இவ்வோலைகளே பயன்பட்டன.
முற்றிய ஓலையானது மாட்டுக்கு உணவாகவும், வீட்டுக் கூரை வேய்வதற்கும், சுற்று வேலிகள் அடைக்கவும், பசளையாகவும் பயன்படுத்தப்படுகிறது.
(2) நார்:
பனம் ஓலை/ இலை யில் இருக்கும் தண்டு/ மட்டையில் இருந்து பிரித்தெடுக்கப்படும் நார் நீண்ட நாள் பாவனைக்குரிய தூரிகைகள் (Brush), துடைப்பங்கள்/ விளக்குமாறு
செய்யவும், கயிறு திரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

(3) மரம்/ தண்டு:
கட்டுமானப் பணிகளுக்கு குறிப்பாக வீட்டுக் கூரைகளுக்கு சிலாகை, தீராந்தி , வளை, என்பவை தயாரிக்க பயன்படுத்த படுகிறது.
(4) பூந்துணர் சாறு/ பதநீர் (Infloresence sap):
மதுவத்தால் (Yeast) நொதித்தல் அடையாத பூந்துணர் சாறு
பதநீராக அருந்தவும், பன்ஞ்சீனி, பனங்கட்டி, பனம் பாணி, பனங்கற்கண்டு,வினாகிரி செய்யவும் பயன்படுத்தபடுகிறது. பதநீரை கருப்பணி என பேச்சு வழக்கில் அழைப்பது வழக்கம். பதநீர் காலங்களில் பச்சரிசி, பயறு என்பனவும், பதநீரும் கொண்டு கருப்பணி கஞ்சி தயாரிப்பதும் வழக்கம். பொதுவாக பத நீர் இறக்க சுண்ணாம்பிடுவார்கள். சுண்ணாம்பு மதுவங்களின் நொதித்தல் செயற்பாட்டை கட்டுப்படுத்தும். சுண்ணாம்பு பதநீரின் சுவையை மாற்றிவிட கூடியது. யாழ்ப்பாணத்தில் செய்யப்பட்ட ஆய்வில் நாவல் பட்டையும் நொதித்தல் செயற்பாட்டைக் கட்டுப்படுத்தும் எனக் கண்டறியப்பட்டுள்ளது.
பதநீரில் வெல்லம் 12-13% ம், அமினோ அமிலங்கள், விற்றமின் பி, கனியுப்புக்கள் ஆகியவை நிறைய இருப்பதாக சொல்லப்படுகிறது.
மதுவத்தால் நொதித்தல் (Fermentation) அடைந்த பின், கள்ளு என அழைக்கப்படுவதுடன், இது சாராயம் வடிக்கவும் பயன்படுகிறது.
(5) நுங்கு:
முற்றாத பனங்காயை நுங்கு என அழைப்போம். நுங்கு மிகவும் சுவையான ஒரு பானம். ஆனால் அதனை நாம் தொழில் முயற்சியில் பயன்படுத்துவது இல்லை. 2 மில்லியன் பனைமரங்களே இருக்கும்தாய்லாந்தில் நுங்கு தகரத்தில் அடைக்கப்பட்டு உலகம் எங்கும் ஏற்றுமதியாகும் அதேவேளை; அதிக பனைவளத்தைக் கொண்ட இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் இருந்து எந்த முயற்சியும் எடுக்கப்படாமை குறிப்பிடத்தக்கது.
(6) பனம் பழம்:
சீக்காய்:- இது பனங்காயின் செங்காய்ப்பதம்; இதன் தோலைச் சீவி,மஞ்சள்சதைப் பகுதியை அரிந்து தட்டுத்தட்டாக சப்பிச்சாறையுறிஞ்சி விட்டு, தும்பைத் துப்புவார்கள்; இனிமையான மாலை ஆசைத் தீனி.
பனம் பழத்தில் இருந்து பெறப்படும் பழக்கூழானது (Fruit pulp) பழப்பாகு (ஜாம்), பனாட்டு, குளிர்பானம், பனங்காய்ப் பணியாரம் என்பன செய்யப் பயன்படுத்தப்படுகிறது.
சுவையான சிற்றுண்டியான பனங்காய்ப் பணியாரம் ஈழத்தில் வெகு பிரபலம். பிழிந்தெடுத்த பனம்பழக்களியுடன் கோதுமைமாச் சேர்த்து கொதிக்குமெண்ணெயில் பாக்களவு உருண்டையாக விழுதாக விட்டுப் பொரித்தெடுப்பது தான் பனங்காய்ப் பணியாரம். மிக வாசமாகவும், சுவையாகவும் இருக்கும், சுமார் ஒரு வாரகாலம் எந்த விசேச பாதுகாப்புமின்றி வைத்துச் சாப்பிடக் கூடியது.
பனாட்டு:- பனம்பழக்களியை பாயில் ஊற்றி வெய்யிலில் காயவைத்து தட்டுத்தட்டாக வெட்டி மடித்து ஓலை உமலில் கட்டி; அடுப்படிப் பறனில் புகை படக்கட்டி வருடக்கணக்கில் பாதுகாத்து உண்ணும் பனம் பண்டம். தேங்காய்ச் சொட்டுடன் மிக அருமையாக இருக்கும்; இது காலை;மாலை உணவு.
சவர்க்காரம் (சோப்பு) கிடைக்காத போர்க் காலத்தில் பனம்பழம் கொண்டுதான்
உடுப்பு தோய்த்தார்கள். பனம் பழத்தின் வாசத்தில் மாடுகள் உடைகளை சாப்பிட்டதாகக்கூட சொல்லுவார்கள். அதை விட, பனம் பழத்தைத் தீயில் வாட்டி சாப்பிடுபவர்களும் உண்டு.

(7) பனங்கிழங்கு:
பூரான்:- பனம் விதை; கிழங்கிக்குப் பாத்தி போடும்போது; சில விதைகள்;முளைத்து வேர் பாத்தியூடு நிலத்துக்கோட முடியாதநிலையில்; அதன் பூரான் மாத்திரம் முதிர்ந்துவிடும். அதைப் பிளந்து உண்ண நல்ல சுவையாக இருக்கும்; கிழங்கான விதையுளுள்ள பூரான் இருக்கமாக இராது. இதைச் "சிதவல்" என்பர். நீர்த்தன்மையுடன்;சுவை குன்றியிருக்கும்.
நன்கு வேரோடிய பனங்கிழங்கு அவித்து உண்ணக் கூடியது.
ஒடியல்:-
"நாராய் நாராய் செங்கால் நாராய்-பனம்படு கிழங்கின்பிளந்தன்ன வாய்" என உவமிக்கப்பட்ட இக்கிழங்கை இரண்டாகப் கிழித்துக் காயவைத்துப் பெறுவதைப் பச்சை ஒடியல் என்பர். இதை இடித்தரித்து எடுக்கும் மாவுடன் முருங்கையிலை,சேர்த்துப் பிட்டவிப்பர்; கறியுடனோ;சீனி,சக்கரையுடனோ சாப்பிடலாம்.அன்றைய தமிழரின் பாரம்பரிய உணவு. அடுத்து இம்மாவில் தயாரிக்கப்படும் முக்கிய உணவு;கூழ் இதில் சைவக்கூழ்;மச்சக்கூழ் எனக் காச்சுவார்கள்.ஒடியல்மாவுடன் மிளகாய்;உள்ளி;மிளகு;புளி;உப்பு கரைசல்; உழுந்து,பயறு,மரவள்ளிக்கிழங்கு;பூசணிக்காய்;ஈரப்பலாக்காய்;
பலாக்கொட்டை;அவரைக்காய்;முல்லை;முடுட்டை; முருங்கைக் கீரை சேர்த்துக் காச்சுவது; தேங்காய்ச் சொட்டும் சேர்த்தால் அருமையாக இருக்கும். இது ஒரு நிறையுணவு.இது சைவ உணவு உண்பவர்களுக்குத் தயாரிப்பது ,இத்துடன் மீன்;நண்டு,கணவாய்,இறால்;திருக்கை;மட்டிச்சதை சேர்த்துச் சமைப்பது;மச்சக்கூழ்; இது மச்சப் பிரியர்களுக்கு.

பனங்கிழங்கை அவித்து காய வைத்து வரும் புளுக்கொடியல் அப்படியே உண்ணக் கூடியது. அத்துடன் புளுக்கொடியல் மா சிற்றுண்டியாகவும் பயன்படுத்தப்படுகிறது.
பனம் பொருட்கள் சம்பந்தமான ஆராய்ச்சிகள் மிகக்குறைவாகவே நடைபெறுகிறது. அப்படி செய்யப்பட்ட ஆய்வுகளில் இருந்து பல பயனுள்ள தகவல்கள் கிடைக்கப்பெற்றாலும் இன்னும் ஆராய்ச்சிகள் தேவையாக உள்ளது. மேலும்,
நடைபெற்றுள்ள பெரும்பாலான ஆய்வுகள் கூட மக்களால் அதிகம் பயன்படுத்தப்படாத பழக்கூழ் பற்றியே நடைபெற்றுள்ளன.

(8) பழக்கூழ் (Fruit pulp):
இந்தப் பழக்கூழானது மருத்துவக் குணங்களுள்ள பல்வேறு இரசாயனங்களைக் கொண்டுள்ளதாக அறியப்பட்டுள்ளது. அவையாவன:
1. கரோட்டினோயிட் (Carotenoids):
100கிராம் பனம் பழத்தில் 2253 மில்லிகிராம் மஞ்சள் நிறமான கரோட்டினொயிட் இருப்பதாக அறியப்பட்டுள்ளது. இது கண்பார்வைக்கு அத்தியாவசியமான பீட்டா கரோட்டின் எனப்படும் விட்டமின் A யின் மூலப்பொருளாகும்.

2. பெக்ரின்
இது உணவு உற்பத்தியில் உணவுப் பொருட்களை உறுதியாக்கவும், அவற்றைக் கூழ் நிலையில் பேணவும்
உதவும்.

3. Flabelliferin பிலபெல்லிபெரின்
இதுதான் பனம் பழத்தில் காணப்படும் கசப்புச் சுவைக்குக் காரணமான பதார்த்தமாகும். இதனை பழக்கூழில் இருந்து பிரித்தெடுப்பதன் மூலம், பழக்கூழை வேறு உணவு பொருட்கள், ஜாம் போன்றவற்றில் நிரப்பியாக பயன் படுத்த முடியும்.
அத்துடன் இந்த Flabelliferin எனும் பதார்த்தம் நுண்ணங்கிகளை கொல்லும் இயல்பும் கொண்டது.
இலங்கையில் எலிகளில் செய்த ஆராய்ச்சியில் Flabelliferin ஆனது குருதியில் உள்ள வெல்லத்தின் (குளுக்கோஸின்) அளவைக்
குறைப்பது கண்டறியப்பட்டுள்ளது. எவ்வாறெனில், நீரிழிவு நோயாளிகளுக்கு 6 கிராம் பனாட்டை கொடுத்து சோதனை செய்தபோது, அவர்களின் குருதியில் இருக்கும் வெல்ல (குளுக்கோஸ்) அளவில் குறைவு ஏற்பட்டது. இதற்கு காரணம் பனாட்டில் இருக்கும் Flabelliferin தான் என விஞ்ஞானிகள் அநுமானித்துள்ளார்கள் .

மேலும், இலங்கையில் பனை அபிவிருத்திச் சபையானது
பழக்கூழில் இருந்து பற்பசை செய்து மாதிரிகளை சந்தைக்கு விட்டிருந்தது.

பனை பற்றிப் பேச முற்பட்டால் பக்கம் பக்கமாகப் பேசலாம். எனினும் கட்டுரையின் நீளம் கருதி இத்துடன் நிறைவடைகிறது.
“பனை வளம் காப்போம்!
பயன் பல பெறுவோம்!!”

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மரமா? மக்களவை உறுப்பினரா??

 அனைவருக்கும் வணக்கம்.      நீலகிரி த்தொகுதி 19-04-2024 வெள்ளிக்கிழமை இன்று 18வது மக்களவைத்தேர்தலில் வாக்களித்துவிட்டு மூன்றுமரக்கன்றுகளையும...