18 ஏப்ரல் 2024

மரமா? மக்களவை உறுப்பினரா??

 அனைவருக்கும் வணக்கம். 

    நீலகிரி த்தொகுதி 19-04-2024 வெள்ளிக்கிழமை இன்று 18வது மக்களவைத்தேர்தலில் வாக்களித்துவிட்டு மூன்றுமரக்கன்றுகளையும்நட்டுவைத்தேன்...

அடுத்த ஐந்தாண்டுகளில் அதிகப்பலன்களைத்தரக்கூடியது யார்?என்ற எதிர்பார்ப்புடன்..



இடம்பெற்றுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகள்:

  • உதகை
  • குன்னூர்
  • கூடலூர்(தனி)
  • மேட்டுப்பாளையம்
  • அவினாசி
  • பவானிசாகர் (தனி)

நீலகிரி தொகுதி மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை: 14,18,915

ஆண் வாக்காளர்கள்: 6,83,021
பெண் வாக்காளர்கள்: 7,35,797
மூன்றாம் பாலின வாக்காளர்கள்:97

மலைகளின் அரசி’ என்று அழைக்கப்படும் உதகமண்டலத்தைக் கொண்டது நீலகிரி மக்களவைத் தொகுதி. இதில் உதகை, குன்னூர், கூடலூர் ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகள் மட்டுமே நீலகிரி மாவட்டத்துக்கு உட்பட்டவை. மேட்டுப்பாளையம் தொகுதி கோவை மாவட்டத்திலும், அவினாசி திருப்பூர் மாவட்டத்திலும், பவானிசாகர் ஈரோடு மாவட்டத்திலும் உள்ளன. நீலகிரி மக்களவைத் தொகுதியைப் பொறுத்தவரை, மலைப் பகுதியைச் சேர்ந்த தொகுதிகளும் சமவெளிப் பகுதிகளைச் சேர்ந்த தொகுதிகளும் வெவ்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்கின்றன.


                                இரண்டு தனித்தனி ரக கொய்யா ...

                                          கறிவேப்பிலை நாற்று...

13 ஏப்ரல் 2024

சதுரங்கம் வாழ்க்கைக்கு தரும் பாடம்.

 





  1. ஒவ்வொரு அசைவும் முக்கியமானது. ஆட்டத்தில் மட்டுமல்ல வாழ்க்கையிலும். வாழ்வில் நாம் செய்யும் ஒவ்வொரு நிகழ்வையும் மிகவும் கவனமாக செயல்படுத்த வேண்டும்.
  2. ஒவ்வொரு அசைவுக்கு முன்பும் நன்கு யோசிக்க வேண்டும். இப்படிச் செய்வதால் என்ன நன்மை, என்ன தீமை? சுருக்கமாக கூறினால், இந்த நகர்த்தலால் ஏற்படும் விளைவுகள் என்ன?
  3. விளையாடுபவர் தற்போதைய நகர்த்தலை மட்டும் கவனிக்க மாட்டார். ஒட்டுமொத்த 64 கட்டங்களையும் கவனிப்பார். வாழ்க்கையையும் ஒட்டுமொத்தமாக கவனிக்க வேண்டும்.
  4. எதிராளி நகர்த்தி விட்டார். இப்போது உங்கள் ‌முறை. நீங்கள்‌ முடியாது என தவிர்க்க முடியாது. நகர்த்தித்தான் ஆக வேண்டும். வாழ்க்கையும் அப்படித்தான். அடுத்தது சாதகமோ பாதகமோ எதிர்கொள்ளத்தான் வேண்டும்.
  5. ராணியே போனாலும் பயப்படவோ பதட்டப்படவோ கூடாது. அடுத்து என்ன செய்யலாம் என்பதில் மட்டுமே சிந்தனை இருக்க வேண்டும்.
  6. குதிரையை எப்படி வேண்டுமானாலும் நகர்த்த முடியாது. L வடிவில் மட்டும்தான் நகர்த்த முடியும். வாழ்க்கையும் அப்படித்தான். இப்படித்தான் வாழ வேண்டும் என முடிவு செய்து வாழ வேண்டும். தமக்கென ஒரு விதிமுறையை வகுத்துக் கொண்டு அதன்படி செயல்பட வேண்டும்.
  7. எவ்வளவு பெரிய விளையாட்டு வீரராக இருந்தாலும் 16 காய்கள்தான். வாழ்க்கையும் அப்படித்தான். நமக்குக் கிடைத்த குறைவானவற்றைக் கொண்டு எவ்வளவு நிறைவாக வாழ்கிறோமோ அதுதான் வாழ்வின் வெற்றி.
  8. சிறிய நகர்த்தல் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும். தினமும் ஒரு 10 நிமிடம் செய்தித்தாள் வாசியுங்கள். உலகமே உங்கள் காலடியில்!
  9. சிப்பாயாக இருப்பது தவறு இல்லை. ஆனால் சரியான திசையில் நகர்ந்தால் சிப்பாயும் ராணி ஆகும். நமது துவக்கம் முக்கியமில்லை. சரியான திசை நோக்கிய பயணமே வெற்றிக்கு முக்கியம்.
  10. வாய்ப்புகள் இந்த 64 கட்டங்களில் தான் உள்ளன. அதைக் கண்டுபிடி. காயை நகர்த்து. வாழ்க்கையிலும் அப்படியே. வாய்ப்புகளை கொட்டிக்கிடக்கின்றன. அதைக் கண்டுபிடி. பயன்படுத்து. வெற்றி பெறுவாய்.

எல்லாத்துக்கும் மேல்..

எந்த ஒரு விசயத்தையும் திட்டமிட்டு செயல்படுத்தினால்  வெற்றிதான்.

அது சதுரங்கமானாலும் சரி

சாதிக்க வேண்டுமென்றாலும் சரி.


  1. மனமுதிர்ச்சி : என்னுடைய வெற்றி தோல்விக்கு நானே காரணம் என்ற மனமுதிர்ச்சி. எதற்கெடுத்தாலும் மற்றவர்கள் மேல் பழி போட்டு தப்பிக்காமை.
  2. பயிற்சி: மூளைக்கு சிறந்த பயிற்சி. நினைவாற்றல் அதிகரிக்கும்.
  3. விஷுவல் மெமரி : காட்சிகள் மூலம் ஏற்படக்கூடிய மூளைப் பதிவு திறனை அதிகப்படுத்தும்.
  4. எண்ணித் துணிக ஒரு செயலை செய்வதற்கு முன், இருமுறை அல்ல பலமுறை யோசிக்கும் தன்மை.
  5. மாற்றான் வலி: எதிராளிக்கும் சம வாய்ப்பு அளிப்பது. அவருடைய நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது.
  6. அடுத்த கட்டம் என்ன? : வீழ்ந்தாலும், எழுந்தாலும் மற்றொரு ஆட்டம் இருக்கிறது என்ற மன தைரியம்.
    அடுத்த முறை கொஞ்சம் முயற்சி செய்து பார்க்கலாம் என்ற மனத் தெளிவு.
  7. கவனக்குவிப்பு : கண்களை சதுரங்க பலகையை விட்டு அகலாமல் வைத்திருப்பதால் வளரும் திறன்.
    ஈடுபாட்டுடன் படிக்கும் பழக்கம், கண்களை புத்தகத்தை விட்டு வெளியே செல்ல விடாமல் பிடித்து வைக்கும்.
  8. விழிப்புணர்வு: அழுத்தமான சூழ்நிலைகளிலும் மனதில் எச்சரிக்கையுடன் விழித்திருப்பது.
  9. தன்னம்பிக்கை: எளிதில் தோல்வியை ஏற்று சோர்ந்து போகாத தன்மை.
    அமைதியுடன் எதிர்காலத்திற்கு திட்டமிடும் பழக்கம்.
  10. மாத்தி யோசி: இக்கட்டான சூழ்நிலையில் இருந்து தப்பிக்க, நிதானமாக மாற்று முறையில் வழி தேடுவது.
  11. சுய கட்டுப்பாடு: உணர்ச்சிகளை கட்டுப் படுத்தும் திறமை. முகத்திலோ, உடல் மொழியிலோ எண்ண ஓட்டங்களை வெளிப்படுத்தாமல் கட்டுக்குள் வைத்திருக்கும் திறமை.
  12. ரிஸ்க் எடுப்பது: இடர் மேலாண்மை அதாவது நெருக்கடியான சூழலை துணிந்து  எதிர்கொள்வது.
  13. வளைந்து கொடுத்தல்: சமூகத்துடன் ஒத்துழைத்தல்....சகிப்புத்தன்மை வளர்த்தல்..

  1. பொறுமையாய் காய்களை நகர்த்த வேண்டும்.
  2. நாம் எங்கே தவறு செய்வோம் என்று ஒரு கும்பலே காத்திருக்கும்.
  3. அதிலும் QUEENக்குத்தான் முழு அதிகாரம்.
  4. என்னதான் KING  ஆட்டத்தின் முக்கிய குறி என்றாலும் அனைவரும் முதலில் கவர நினைப்பது QUEENயை தான்.
  5. கூட்டமாக இருக்கும் வரை பயம் இல்லை, தனியே வெளியே வந்து விட்டால் எதிரணியின் மொத்த காய்களும் அதை அழிக்கவே முயலும்.
  6. விழுந்தவுடன் எழும்  KNIGHT  இருக்கும் வரை தடைகளை தாண்டி போகலாம் எதுவும் நம்மை தடுக்க முடியாது.
  7. ஏதோ ஒரு மூலையில் ஏதோ ஒரு சமயம் நாம் வெட்டாமல் விட்ட காய் சரியான நேரத்தில் நமது முக்கியமான காயை வெட்டும் போது தான் தெரியும் யாரையும் அலட்சியமாக நினைக்க கூடாது என்று.
  8. KING  சரியான நேரத்தில் நகராமல் இருந்தாலும் சரி தவறான நேரத்தில் நகர்ந்தாலும் சரி ஆபத்துதான்.

இனி எனக்குப் பிடித்த சில உத்திகள்:

  1. எதிராளி கூடுதல் எகிறி அடிக்கும் (offensive) விதமாக இருந்தால் நாம் சற்று கூடுதல் தற்காப்பாக ஆடவேண்டியிருக்கும். மாற்றி, எதிராளி கூடுதல் தற்காப்பு கேஸ் என்றால் நாம் எகிறி அடித்து ஆடிப்பார்க்கலாம்!
  2.  சதுரங்கத்தில்! KNIGHT குதிரையின் தனித்தன்மை முக்கியத்துவம் வாய்ந்தது. ஒரு KNIGHT  வைத்து CHECK  சொன்னால் எதிரி கண்டிப்பாக KINGவை நகர்த்தியே ஆக வேண்டும். மற்ற காய்களினால் என்றால், சில சமயங்களில் வேறு காய்களை இடையில் வைத்து வழி மறிக்க முடியும்.
  3. KNIGHTயை வைத்து 'fork' செய்வது ஒரு அருமையான உத்தி. அதாவது KNIGHTயை வைத்து KINGக்கு செக் வைக்கும் சமயத்திலேயே அதே KNIGHT எதிரியின் ஒரு ROOKஐ அல்லது, QUEENஐ,  அல்லது வேறு ஒரு பெரிய காயையோ வெட்டும் ஒரு இடத்தில் இருக்குமாறு வைப்பது! அப்படி சில சமயங்களில் அருமையாக அமையும்! இப்படிப்பட்ட ஒரு வாய்ப்பை விடவே கூடாது!
  4.  BISHOPப் பறிகொடுத்தேனும் எதிராளியின் KNIGHTயை அழித்துவிடப் முயற்சிக்கணும்.
  5.  QUEENயை வைத்துக் கொண்டு எதிரிப்படையுள் புகுந்து கலக்கும்போது  QUEENயை மட்டும் கொண்டு போகக் கூடாது. எப்போதும்  QUEENக்குப் பாதுகாப்பாகவோ, பின் புலமாகவோ வேறு ஒரு காய் கண்டிப்பாக உடன் போகவேண்டும்.
  6. KINGக்கு சுற்றியிருக்கும் அடுத்த ஒரு கட்டத்தில் QUEENயை வைத்து செக் சொல்வது ஆட்டத்தை முடிக்க சிறந்த உத்தியாகும். அந்த  QUEENயை KINGவோ வேறு காயோ வெட்ட முடியாதவாறு உங்கள் ஒரு காயின் பாதுகாப்பு அங்கே  QUEENக்கு இருக்க வேண்டும். 
  7. முடிந்த வரை ROOKகள் KINGவுக்குக் காவலாக அமையட்டும். அதற்கு எப்போதும் Castling செய்யும் விதத்தில் கட்டங்களைக் காலி செய்து தயாராக வைத்துக்கொள்ளுங்கள்.
  8. பெரும்பாலும்  QUEENயைப் பறிகொடுத்தபின் தான் ROOKகள் முக்கியத்துவம் பெறும்! இரண்டு ROOK ஒரே வரிசையில் கொண்டுபோவது என்பது ஓர் பலமான உத்தி.
  9.  QUEEN போயாயிற்று என்றால் ஆட்டத்தில் துவண்டுவிடக்கூடாது.அடுத்த நகர்வை மனதைர்யத்துடன் நகர்த்த வேண்டும்.
  10. உங்கள்  QUEENக்கு பல சமயங்களில் எதிரியின் KNIGHTல் ஆபத்து உண்டாகும். 
  11. உங்கள்  QUEEN, ஆல்KINGஐ  வழி மறைக்காமல் பார்த்துக்கொள்வது நல்லது. சமயத்தில் நீங்கள்  QUEENயை நகர்த்தினால் உங்கள்KING வுக்கு செக் ஆகும் என்கிற சந்தர்ப்பங்களில் மாட்டிக்கொள்வோம்.
  12. உங்கள்  QUEEN இருக்கும் பாதையில் எதிரியின் ஒரு பிஷப் ஒரு 'பான்' ஆல் மறைக்கப் பட்டிருந்தால் ஜாக்கிரதை! சத்தம் போடாமல் எதிராள் சாது போல பானை நகர்த்துவார்! அந்த பான் வேறு ஒரு காயைத் தாக்குவது போல இருக்கும். உங்கள் கவனம் அந்தக் காயைக் காப்பாற்றப் போய்விட, எதிரியின் பிஷப் உங்கள்  QUEENயை சாய்த்துவிடும்!பின் அதே உத்தியில் எதிராளி  QUEENயை சாய்ப்பதற்கு யோசி!
  13. உங்கள்  QUEEN முதலில் போய்விட்டால் சுணங்க வேண்டாம். இதனால் மிகப் பெரும்பாலும் எதிராளிக்கு சற்று அலட்சியம்  கூடும். கவனக் குறைவால் அவரும் தன்  QUEENஐ இழக்கும் சந்தர்ப்பம் வரும். 

PAWN -இதன் நகர்வுகள் எளிமை.எதிரியின் கடைசி வரிசையை அடைந்தால், இழந்தகாய்களை திரும்ப கொண்டு வரலாம்.

ROOK -தன் கட்டத்தில் இருந்து நான்கு திசையிலும் மற்றவர்களை அழிக்க கூடியது.

KNIGHT - நகர்வுகளால் எதிர் அணி தங்களின் பெரிய பவரை இழக்க நேரிடும்.எதிரியின் KNIGHT நகர்வுகளை அதிகமாக கவனிப்பதால் நம்முடைய கவனிக்கும் திறன் அதிகரிக்கும்.

BISHOP -தான் நிற்கும் கட்டத்தின் வண்ணத்தில் குறுக்குதிசையில் பயணிக்க கூடியவர்.இவரையும் சில சமயம் இருப்பது தெரியாமல் எதிர் அணியினர் விளையாடுவர்‌.

 QUEEN-தான் இருக்கும் கட்டத்தில் இருந்து எந்த திசையிலும் செல்ல கூடிய பவர்ஃபுல் நபர்.

KING-எந்த திசையிலும் ஒரு கட்டம் மட்டும் நகர கூடியவர்.சில சமயங்களில் தனியாக நின்று தான் தோல்வி அடையாமல் தன்னை காத்துக் கொள்வார்.

சிலர் ஆக்ரோஷமாக ஆடி எதிர் அணியை தோற்கடிக்க விரும்புவார்கள்.இவர்கள் அதில் தடுமாற வாய்ப்பு அதிகம்.

சிலர் பொறுமையுடன் விளையாடி எதிர் அணி தவறான நகர்த்தலை செய்கிறார்களா என்றுகவனிப்பர்.

சிலருக்கு  QUEEN, KNIGHT எதிர் அணியில் இருந்தால் நாம் தோல்வி அடைவோம் என்று நினைத்து, தம் QUEEN ,KNIGHT யை இழந்தாலும் பரவாயில்லை நேருக்கு நேர் வெட்டுவோம் என்று விளையாடுவர்.

சிலர் என்ன ஆனாலும் கடைசியில் நம்மிடம் அதிக PAWNS இருந்தால் எதிர் அணியின் கடைசி கட்டம் சென்று இழந்த பவரை மீட்டு விடலாம் என்று விளையாடுவர்.

இப்படி சதுரங்கத்தில் ஏகப்பட்ட நுணுக்கங்கள் உள்ளன.

இந்த ஆட்டத்தை தொடர்ந்து அதிக நேரம் விளையாடினால்:

  • எப்போது அதிவேகமாக செயல் பட வேண்டும்.
  • எப்போது பிரச்சனையில் இருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும்.
  • புதிதான சவாலை எப்படி சமாளிப்பது என்று பல விஷயங்களுக்கு மூளை பயிற்சி அடையும்.

பொறுமை:

சதுரங்கத்தில் பொறுமை மிகவும் முக்கியம். எதிராளியின் நகர்வைப் பற்றி பொறுமையாக யோசித்து, நம் நகர்வை தீர்மானிக்க வேண்டும்.

அதே போல, நம் வாழ்க்கையிலும் ஒரு முடிவை எடுப்பதற்கு முன் பொறுமையாக, பல கோணங்களில் யோசிக்க வேண்டும். நாம் எடுக்கப் போகும் முடிவினால் ஏற்படவிருக்கும் சாதக, பாதகங்களை ஏற்றுக் கொள்ளவும் நாம் பக்குவப்பட்டிருக்க வேண்டும். அவசரப்பட்டு எடுக்கும் முடிவு, பல நேரங்களில் தவறாக இருக்கலாம், அவ்வேளையில் நம் சிந்தனையில் "இதை அவ்வாறு செய்திருக்கலாம், இவ்வாறு மாற்றியமைத்திருக்கலாம்", என்ற சிந்தனைகள் மேலோங்கும். எனவே, அம்முடிவை எடுக்கும் முன்னர் தேவைப்படும் நேரமெடுத்து, பொறுமையாக யோசித்து செயல்பட்டால், நம்முடைய அடுத்த நகர்வுகள் நற்பயன்களைத் தரும்.

பொறுமை கடலிலும் பெரியது

திட்டமிடல்:

சதுரங்கத்தில் எதிராளியின் நகர்வையும், கவனமின்மையையும் நமக்குச் சாதகமாக பயன்படுத்த வேண்டும், அதற்கு நாம் சரியான விதத்தில் திட்டமிட்டு காய்களை நகர்த்த வேண்டும்.

நம் வாழ்க்கையிலும், எதைச் செய்வதாய் இருந்தாலும், திட்டமிடல் நல்ல பழக்கமாக இருக்கும். அதன் மூலமாகவே, நம் முயற்சி எந்த அளவில் பயன் தரும், இடர்கள் வந்தால் எவ்வாறு சமாளிப்பது என்பவற்றை எல்லாம் முன் கூட்டியே அறிந்து, அதற்கேற்ப நம் திட்டங்களை வகுத்துக் கொள்ளலாம்.

கட்டத்திற்கு தேவை, நல்ல திட்டம்

வீழ்த்துவதை விட, தற்காத்தலே முக்கியம்:

சதுரங்கம் விளையாடுபவர்களை எளிதாக இருவகையாக பிரிக்கலாம்,

  • தாக்குபவர்கள்
  • தடுப்பவர்கள்

தாக்குதல், தடுத்தல் என்னும் இந்த இரண்டில் ஏதோ ஒன்றை மட்டுமே ஒருவர் பின்பற்றினால், நிச்சயம் அவரால் வெற்றியை எட்டிவிட முடியாது. இந்த இரண்டையும் தகுந்த நேரத்தில் பயன்படுத்துவது மூலமாக தான், நம் நோக்கத்தை அடைய முடியும். எனினும், தாக்குவதை விட, தற்காத்தலே நம்மை உயிர்ப்புடனும், தன்னம்பிக்கையுடனும் வைத்திருக்க உதவும்.

வாழ்க்கையிலும் நாம் மற்றவரை வீழ்த்துவதை விட, நம்மை தற்காத்துக் கொள்வதே நல்ல முடிவாக இருக்கும். மற்றவரை தாக்கும் நோக்கத்தை மட்டுமே நாம் கொண்டிருந்தால், நாம் செய்யும் சிறு பிழை கூட, நம்மை முழுவதுமாக மூழ்கடிக்கக் கூடும். மேலும், நாம் பிறரை வீழ்த்த நினைப்பதற்கு முன், அதற்கான ஆற்றலும், தன்னம்பிக்கையும் நமக்கு இருக்க வேண்டும், அதற்கு தற்காத்தலே தேவைப்படும்.வலியது தான் உயிர் பிழைக்கும்

நேர மேலாண்மை:

சதுரங்க விளையாட்டில் இன்னொரு வகை, நேரத்திற்குள் வெற்றி பெறுவது. அதாவது, இருவருக்கும் குறிப்பிட்ட நேரம் கொடுக்கப்படும், அதற்குள் ஒருவர் எதிராளியை வென்றுவிட வேண்டும். ஒருவருக்கு பத்து நிமிடங்கள் என எடுத்துக் கொண்டால், அவர் சிறிது நேரத்தை எடுத்துக் கொண்டு தன் காயை நகர்த்தி விட்டு, அந்த நேரம் குறைந்து கொண்டிருக்கும் காலக் கருவியை தட்டுவார், பின் எதிராளிக்கு நேரம் குறையத் தொடங்கும். இவ்வாறு, இருவருக்கும் நேரம் குறைந்து கொண்டே இருக்கும், அதற்குள் யாராவது ஒருவர் வெற்றி பெற வேண்டும்.

இத்தகைய விளையாட்டு முறை, நமக்கு நேர மேலாண்மையை கற்றுத் தரும், சிறிய கால இடைவேளையில், வேகமாக சிந்தித்து நல்ல முடிவை எடுக்க வைக்கும். மேலும், நமக்கு கொடுக்கப்பட்ட நேரத்தை எவ்வளவு பயனுள்ளதாக மாற்ற முடியும் என்பதையும் உணர்ந்து கொள்வோம்.

வினையும், எதிர்வினையும்:

நம் ஒரு காயை நகர்த்த, நம்மை வீழ்த்த, அல்லது தன் காயை காப்பாற்ற எதிராளி ஒரு காயை நகர்த்துவார். எனவே, நாம் செய்யும் ஒவ்வொரு வினைக்கும், தகுந்த எதிர்வினை இருக்கும்.நியூட்டன்விதி நினைவுபடுத்தும்.

இதே போல, நம் வாழ்க்கையிலும், நாம் செய்யும் செயல்களுக்கேற்ற எதிர்வினை இருக்கும், அது நல்லதா, தீங்கானதா, என்பது நம் வினையையும், நேரத்தையும் பொறுத்தது.

எதிர்காலத்தை யூகித்தல்:

நாம் சதுரங்கம் விளையாடிப் பழகப் பழக, எதிராளி என்ன யோசிக்கிறார், எதற்காக குறிப்பிட்ட காயை நகர்த்துகிறார், என எளிதாக நம்மால் யூகிக்க முடியும். இதனால், அடுத்தடுத்து எதை நகர்த்துவார் என்பதை நாம் அனுமானித்து, அதற்கேற்ற பதிலடியை நாம் கொடுக்கலாம்.

நாம் பெறும் அனுபவங்களும், கற்ற அறிவும், நம் எதிர்காலத்தை எதிர்நோக்க உதவும், எனவே அவற்றை எவ்விதத்தில் அமைத்துக் கொள்வது என நாம் முடிவு செய்து, அதற்கேற்ற முயற்சிகளை மேற்கொள்ளலாம்.நிகழ்கால முயற்சி, எதிர்காலத்தை மாற்றவல்லது

மனதை ஒருநிலைப் படுத்துதல்:

சதுரங்கம் விளையாடும் பொழுது, நம் கவனம் முழுவதும் அதில் இருந்தால் மட்டுமே, நம்மால் எந்தநிலையையும் சமாளிக்க முடியும். இதனால், மனதை ஒருநிலைப் படுத்தி விளையாடுவது, நம்மை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லும்.

வாழ்க்கையிலும் ஒன்றை நாம் அடைய வேண்டிய பட்சத்தில், அதற்கான முனைப்பும், முயற்சியும் அவசியம். அதற்காக நம் மனதை ஒருநிலைப் படுத்தி, கவனச் சிதறல்கள் ஏற்படாமல் தவிர்க்க வேண்டும்.

மனதை நாம் கட்டுப்படுத்த வேண்டுமன்றி, மனம் நம்மை கட்டுப்படுத்தக் கூடாது

சுற்றத்தை கவனித்தல்:

சதுரங்கத்தில் நாம் ஒரு காயை நோக்கியே நம் கவனத்தை செலுத்தக் கூடாது, அனைத்தையும் கவனிக்க வேண்டும். நம்முடைய மற்றும் எதிராளியின் ஒவ்வொரு காயிற்கான அனைத்து சாத்தியமான நகர்த்தல்களையும் கவனித்து விட்டு, பின் நம் முடிவை மேற்கோள்ள வேண்டும்.

நம் வாழ்க்கையிலும், ஒன்றை நம்பியே களம் இறங்கக் கூடாது, நமக்கு உதவக்கூடிய மற்றும் நம் வெற்றிக்குத் தேவையான அனைத்து சாத்தியக் கூறுகளையும் ஆராய்ந்து, பின் நம் முயற்சியை மேற்கொள்ள வேண்டும். அதே போல, நம்மை சுற்றி இருக்கும் ஒவ்வொருவெரின் செயல்பாடுகளையும் நாம் கவனிக்க வேண்டும். நமக்கு தீங்கு செய்பவர் யார், நன்மை யார், என்பதை அதன் மூலமாக தான் அறிய முடியும்.

புன்னகைப்பவர்கள் யாவரும் நல்லவர்கள் அல்ல, கோபிப்பவர்கள் யாவரும் கெட்டவர்களும் அல்ல

தியாகங்கள்:

சதுரங்கம் விளையாடும் பொழுது, சில நேரத்தில் நம்முடைய பலம் பொருந்திய காயை காப்பாற்ற இன்னொரு காயை இழக்க வேண்டிய நிலை ஏற்படலாம். அந்த காயின் தியாகத்தினால், மற்றொரு சாமர்த்தியமான நகர்த்துதலை நம்மால் மேற்கொள்ள முடியும்.

நம் வாழ்க்கையிலும், ஒன்றைப் பெறவும், முயற்சியால் அடையவும் சிற்சில தியாகங்களை நாம் செய்ய வேண்டியதிருக்கும். அவ்வாறான தியாகங்களை செய்யத் தயங்கினால், வெற்றி நம்மை விட்டு, தொலைதூரம் சென்றுவிடும்.

தியாகம் ஒருவனை உயர்த்தும்

எளிதில் துவண்டு போகாதிருத்தல்:

முக்கியமாக, சதுரங்கத்தில் ஒரு பலம் பொருந்திய காயை, ஏதோ ஒரு பிழையினால் இழக்க நேரிட்டால், உடனே மனம் தளர்ந்து, விட்டுக் கொடுத்து விடக் கூடாது. நம் கையிருப்பைக் கொண்டு எவ்வாறு சமாளிக்கலாம் என்பதை யோசித்து செயல்பட வேண்டும். ஏனெனில், நாம் இழக்கும் தருவாயில் கூட, ஆட்டத்தின் போக்கை மாற்றி விடலாம்.

நம் வாழ்க்கையில் ஆயிரம் பிரச்சனைகள், நம் முயற்சியில் இடர்கள், தன்னம்பிக்கை குறைந்து போதல், மனச் சோர்வு, விரக்தி போன்ற சூழ்நிலைகளில், நம் களைப்படைந்த மனதைத் தேற்றி, அடுத்த கட்டத்தை நம்மை நகர்த்திக் கொள்ள வேண்டும். யாருக்குத் தெரியும், நாம் விழுந்த குழியில் வைரக்கற்கள் கூட இருக்கலாம்.

தோல்விகளாலே துவண்டு விடாதே

வெற்றிகளாலே வெறி கொள்ளாதே!

மேலே கூறிய அனைத்தும், மறைமுகமாக ஒன்றுக்கொன்று தொடர்பு உடையவை. 64 கட்டங்களும், 32 காய்களும் பல வாழ்க்கைப் பாடங்களையும், அறிதிறன்களையும் நமக்கு கற்றுத் தரும் என்பதே ஒரு விந்தை தான்.

  1. 2மூளையின் ஒருங்குமுனைப்புக்களின் வளர்ச்சி (Grows dendrites):-

ஒருங்குமுனைப்புகள் மூளையில் ஒரு கிளை வடிவமான பகுதி. அது நமது நரம்பு மண்டலத்தில்லுள்ள அனைத்து   நரம்பு அணுக்களுக்கு தகவல் பரிமாற்றம் (conducting signals) செய்கிறது.  குழந்தை பருவத்தில் செஸ் விளையாடும் குழந்தைகளுக்கு இந்த ஒருங்குமுனைப்புகள் (dendrites) அதிகமாக வளர்கிறது என்று ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளனர்.




28 பிப்ரவரி 2024

முனைவர்.இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phil.,Ph.D., அவர்களது வாழ்க்கைக்குறிப்பு... (Dr.R.K.Manikkam, professor,Writer)

                                                  

                                

                    முனைவர். இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phil.,Ph.D.,  

                              ( Dr.R.K.Manikkam, professor, Writer )

                       தோற்றம்; 17.01.1943      மறைவு; 25.02.2024                                                                    

                                          விதைகள் வாசகர் வட்டம் வெளியிட்ட 

                    "சந்தனநகரம் சத்தியமங்கலம் வரலாறு"                                                                   நூல் ஆசிரியர் 


                               மனிதருள் ஓர் மாணிக்கம் 

          முதுமைக்கே உரிய நோய்களின் பிடியில் சிலகாலம் சிக்கியிருந்த முனைவர் இரா.கா.மாணிக்கம் அவர்கள் 25.02.2024 ஞாயிற்றுக் கிழமை மாலை ஆறரை மணியளவில் இவ் உலக வாழ்வை நீத்துத் தம் உள்ளங்கவர்ந்த  தில்லைக் கூத்தனின் திருவடி சேர்ந்தார். சரியாகச் சொல்வதென்றால் அவர் இம் மண்ணுலகில் வாழ்ந்த காலம் எண்பத்தோர் ஆண்டுகள் ஒரு மாதம் எட்டு நாள்கள்.

               ஈரோடு மாவட்டம் கோபி வட்டம் கொங்கர்பாளையம் என்னும் சிற்றூரில் சீர்மிகு வேளாண் குடும்பத்தில் 17.01.1943 அன்று பிறந்தார். 

            பெற்றோர் திரு.காளியண்ணன் – திருமதி செல்லம்மாள். இவர்கள் தம் மகனுக்குச் சூட்டிய பெயர் உத்தரராசு என்பதாகும். இந்தக் குடும்பம் கொங்கர்பாளையத்திலிருந்து அருகிலுள்ள, அக் காலத்தில் இராஜேந்திரபுரம் என அழைக்கப்பட்ட, இப்போது மூலவாய்க்கால் என அழைக்கப்படும் ஊருக்கு இடம் பெயர்ந்தது. 1974இல் மீண்டும் கொங்கர்பாளையம் சென்று அங்கே வீடுகட்டித் தோட்டம் வாங்கி விவசாயம் செய்தனர்.

            உத்தரராசுவுக்குப் பள்ளியில் சேர்க்கும் வயது வந்தவுடன் முதலில் உள்ளூரில் இருந்த திண்ணைப் பள்ளிக்கூடத்தில் சேர்த்தனர்.. பின்னர் சத்தியமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளியில் சேர்க்கச் சென்றபோது அப் பள்ளியின் தலைமையாசிரியர் உத்தரராசு என்னும் வடமொழிப் பெயரை நீக்கிவிட்டு, மாணிக்கம் என்னும் அழகிய தமிழ்ப்பெயரைச் சூட்டி, இராஜேந்திரபுரம் காளியண்ணன் மகன் மாணிக்கம் எனப் பள்ளிப் பதிவேட்டில் பதிவு செய்தார்! அப் பள்ளியில் தம் பள்ளிப் படிப்பை நிறைவு செய்தார் மாணிக்கம் போன்ற மாணிக்கம்.

           தொடர்ந்து  கோவை பூ.சா.கோ. கல்லூரியில் புகுமுக வகுப்பை முடித்தார். தொடர்ந்து அங்கேயே தமிழ் இளங்கலைப் பட்டப்படிப்பில் சேர்ந்து முயன்று படித்து முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். அந்த அளவில் ஓர் அரசு அலுவலகத்தில் எழுத்தராகப் போயிருக்கலாம். ஆனால் தமிழின்பால் அவருக்கிருந்த தணியாத ஆர்வத்தின் காரணமாக சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் முதுகலைப் பட்டப்படிப்பில் சேர்ந்து முறையாகப் படித்து, வகுப்பில் முதல் மாணாக்கராக விளங்கினார். பல்கலைக்கழகத் தேர்வில் உச்ச மதிப்பெண் பெற்று, பேராசிரியர் தெ.பொ.மீனாட்சிசுந்தரனாரின் மாணாக்கர் என்னும் பெருமையோடு, தெ.பொ.மீ. தங்கப் பதக்கமும் வென்றார்.

          தாம் விரும்பிய ஆசிரியப்பணி அவரைத் தேடி வந்தது. பூ.சா.கோ. கல்லூரியில் பணியாற்ற வருமாறு வந்த அழைப்பை ஏற்று 1965 ஆம் ஆண்டு தம் இருபத்திரண்டாம் அகவையில் அரும்பும் மீசையுடன் அளவில்லா ஆசையுடன் அங்கே இளம் பேராசிரியராய்ப் பணியாற்றத் தொடங்கினார். புகழ்பெற்ற அறிஞர் பேராசிரியர் மா.ரா.போ. குருசாமி அவர்களின் தலைமையில் ஓராண்டு பணியாற்றினார். பின்னர் கோவில்பட்டி கோ.வெங்கிடுசாமி நாயுடு கல்லூரியில் நான்காண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றினார். அதன் பின்னர் 1971ஆம் ஆண்டு கோபி கலை அறிவியல் கல்லூரியில் பணியாற்றும் வாய்ப்பினைப் பெற்றார். பணியில் இருக்கும்போதே பூ.சா.கோ. கல்லூரியில் பகுதி நேர ஆய்வாளராகச் சேர்ந்து எம்.ஃபில்., பிஎச்.டி பட்டங்களைப் பெற்றார். 

     கோபி கலை அறிவியல் கல்லூரியில் முப்பத்தோர் ஆண்டுகள் தகைசான்ற தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி 2001ஆம் ஆண்டில் தமிழ்த்துறைத் தலைவர் என்ற நிலையில் பணிநிறைவு பெற்றார்.  

          தம் பணிக்காலத்தில் ஆய்வில் நாட்டமுள்ளவர் யார் அவரை அணுகினாலும், பள்ளி ஆசிரியர் கல்லூரிப் பேராசிரியர் என்ற பாகுபாடு பார்க்காமல் ஆய்வு நெறியாளராக இருந்து அவர்களைப் பட்டப் பேற்றுக்கு உரியவராக ஆக்கி மகிழ்ந்தார்; மகிழ்வித்தார். அவரது வழிகாட்டுதலில் இருபத்தொருவர்  எம்.ஃபில் பட்டமும், ஐவர் பிஎச்.டி பட்டமும் பெற்றனர். அம் மாணாக்கர் அணியில் நானும் ஒருவன். அவரது மேலான வழிகாட்டுதலில் இரண்டு ஆய்வுப் பட்டங்களைப் பெற்றேன்.

                 தகுதி உடையார்க்குத் தக்க வாய்ப்புகள் எப்போதும் தேடி வரும். அந்த வகையில் பணிநிறைவுக்குப் பின்னரும் அப்போது புதிதாகத் தொடங்கப்பெற்ற சத்தியமங்கலம் காமதேனு கலை அறிவியல் கல்லூரியின் முதல்வராக மூன்று ஆண்டுகள் திறம்படப் பணியாற்றித் தன்விருப்பில் ஓய்வு பெற்றார். அதன் பிறகு குன்றாத தாளாண்மையுடன் விரும்பி வேளாண்மை செய்தார்.

         பணிக்காலத்தில் நிறைய ஆய்வுக் கட்டுரைகளை எழுதினார். அவை பல்வேறு இதழ்களுக்கு அணி சேர்த்தன. பணிநிறைவுக்குப் பின் தன் துணைவியாருக்குப் பெருமை சேர்க்கும் வண்ணம் தமயந்தி பதிப்பகம் என்னும் பதிப்பகத்தை நிறுவி அதன் வாயிலாக பதினைந்து நூல்களை எழுதி வெளியிட்டார். 

          ஊர் வரலாறுகளை எழுதுவதில் தனித்திறன் பெற்று விளங்கினார். சத்தியமங்கலம் வரலாறு, கொங்கர்பாளையம் வரலாறு, விரைவில் வெளிவரவுள்ள அந்தியூர் வரலாறு ஆகியவை குறிப்பிடத் தகுந்தவை ஆகும். 

             இவர் தொகுத்து வெளியிட்ட பேராசிரியர் கா.அரங்கசாமி, பேராசிரியர் செ.சு.பழனிசாமி ஆகியோரின் நினைவேந்தல் மலர்கள் இன்றும் என்றும் பெரிதாகப் பேசப்படும் சிறப்புடையன.

         கோபி ஜேசீஸ் என்னும் அமைப்பின் தலைவராய் இருந்து சமூகப் பணிகளைச் செவ்வனே செய்தார். அவ்வமைப்பின் வாயிலாக வெளிவந்த ‘கரும்பு’ இதழின் பதிப்பாசிரியராய்ப் பல்லாண்டுகள் பணி செய்தார்.

             கோபி சுழற்சங்கத்தின் தலைவராகவும் விளங்கி நற்பணிகளை நாட்டமுடன் செய்தார்.

                கோபியில் திருக்குறள் பேரவையின் தலைமைப் போறுப்பேற்று அதன் நிதி நிலையை மேம்படுத்திச் செயல்பாடுகளையும் முடுக்கிவிட்டார்.

                  கோபி வைரவிழா மேனிலைப் பள்ளியில் நான் தலைமையாசிரியராகப் பணியாற்றிய காலத்தில் பெற்றோர் ஆசிரியர்க் கழகத்தின் தலைவராக இருந்து பள்ளியின் செயல்பாடுகளுக்குப் பல்லாற்றானும் உதவியதை இன்றும் நன்றியோடு நினைத்துப் பார்க்கின்றேன்.

                 இரா.கா.மாணிக்கம் அவர்களின் துணைவியார் திருமதி.தமயந்தி அவர்கள் ஈராண்டுகளுக்கு முன் இறையடி சேர்ந்தார்கள். 

                   மகேந்திரன், அரவிந்தன் என்னும் மக்களும், மூன்று பெயரன்களும் இவர் தக்கார் என்பதற்குச் சான்றெச்சங்களாகத் திகழும் வழித் தோன்றல்கள்.

                     வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து மறைந்த நம் பேராசிரியரின் புகழ் என்றும் நிலைத்திருக்கும். 🙏

ஐயா அவர்களின் மாணாக்கராக,

-முனைவர் அ.கோவிந்தராஜூ,( கரூர்).

தலைமையாசிரியர்(பணிஓய்வு) ,

வைரவிழா மேல்நிலைப் பள்ளி,

கோபிசெட்டிபாளையம்.

26 பிப்ரவரி 2024

Dr.R.K.Manikkam, professor, Writer, - Gobichettipalayam

                    மறைந்தார் மாமனிதர்

முனைவர்.இரா.கா.மாணிக்கம் தமிழ்த்துறை பேராசிரியர் அவர்கள்..கோபி செட்டிபாளையம்.

 தோற்றம்; 17.01.1943      மறைவு; 25.02.2024          

















பாராளும் பைந்தமிழைப்

பார்போற்றக் கற்றிருந்தார்

யாரோடும் பகையறியா

அரும்பண்பு பெற்றிருந்தார்

நூறாண்டு வாழ்ந்திருந்து

நூல்செய்வார் என்றிருந்தோம்

தீராத நோய்த்தொற்றால்

திடுமென்று மறைந்துவிட்டார்!


அன்பாகப் பேர்சொல்லி

அழைக்கின்ற வாயெங்கே?

என்றைக்கும் வழங்குகின்ற

ஏந்தலவர் கைகளெங்கே?

இரக்கத்தின் இருப்பிடமாய்

இருந்தவிரு கண்களெங்கே?

மறக்கத்தான் மனம்வருமோ

மாமனிதர் நினைவுகளை.


காப்பியரைக் காணுதற்குக்

ககனந்தான் சென்றாரோ?

பாப்புனைந்த பாரதியைப்

பார்க்கத்தான் சென்றாரோ?

தீப்பட்ட புழுவினைப்போல்

துடிக்கின்றோம் வேதனையில்

சாப்பறையும் கொட்டுகின்ற

சங்கடமும் வந்ததம்மா!


பொய்சொல்லா மாணிக்கம்

போனதிசை தெரியவில்லை

செய்நூல்கள் அழியாது

செப்பிடுமே அவர்திறனை

பெய்மழைபோல் பயன்தந்த

பெருமகனைக் காணாமல்

கைபிசைந்து நிற்கின்றோம்

கண்ணீரும் குறையவில்லை!



முல்லைப்பூ விரிவதுபோல்

முறுவலிக்கும் இன்முகத்தார்

இல்லைஇனி என்பதையே

ஏற்கமனம் மறுக்கிறதே

தில்லைவாழ் பெருங்கூத்தன்

திருவடியில் அவர்ஆன்மா

எல்லையிலா அமைதியிலே

எப்போதும் திளைக்கட்டும்.


ஆழ்ந்த இரங்கலுடன்,

அவருடைய மாணாக்கர்,




இனியன் அ.கோவிந்தராஜூ,

 தலைமையாசிரியர்,(பணிநிறைவு)
வைரவிழா மேல்நிலைப் பள்ளி,
கோபிசெட்டிபாளையம்..

25 பிப்ரவரி 2024

தமிழ்த்துறைப் பேராசிரியர் ,முனைவர்.இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phil.,Ph.D., (நூல் வெளியீட்டு நிகழ்வில்)

                                   மதிப்பிற்குரிய ஐயா              முனைவர்.இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phil.,Ph.D.,  அவர்கள் 

                     தோற்றம்; 17.01.1943      மறைவு; 25.02.2024          


மதிப்பிற்குரிய முனைவர் மறைந்த .இரா.கா.மாணிக்கம் ஐயா அவர்கள்,
2023 ஜூலை மாதம் 14 முதல் 19வரைசத்தியமங்கலம் ஸ்ரீசுந்தர் மஹால்திருமண மண்டப அரங்கில் நடைபெற்ற புத்தகத் திருவிழாதொடக்கநாள் 14-07-2023 அன்று சந்தன நகரம் சத்தியமங்கலம் வரலாறு - நூல் வெளியீட்டு  நிகழ்வில் சிறப்புரையாற்றிய தருணம்.

           சந்தனநகரம் சத்தியமங்கலம் வரலாறு- நூல் வெளியீடு.....

சத்தியமங்கலம் நகர்மன்றத்தலைவர்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்,ஊராட்சி ஒன்றியப் பெருங்குழு தலைவர்,சத்தியமங்கலம் ரோட்டரிசங்கத் தலைவர்,காமதேனு கலை அறிவியல் கல்லூரியின் நிறுவனர் ,உட்பட பல்வேறு சமூகநல அமைப்புகள் இணைந்து வெளியிட்ட தருணம்.மேடையில் நூலாசிரியர்,முனைவர்.மறைந்த இரா.கா.மாணிக்கம் ஐயா அவர்களும்......

மதிப்பிற்குரிய மேன்மக்கள் சூழ, முனைவர் இரா.கா.மாணிக்கம் ஐயா அவர்கள்......

மறைந்த முனைவர். இரா.கா.மாணிக்கம் ஐயா அவர்களுக்கு விதைகள் வாசகர் வட்டம் சார்பாக காமதேனு கலை அறிவியல் கல்லூரிநிறுவனர் அவர்கள் நினைவுப்பரிசு வழங்கி மகிழ்ந்த தருணம்...

    என்றும் சத்தியமங்கலம் மக்கள் நினைவில்...

                           சத்தியமங்கலம் காமதேனு கலை அறிவியல் கல்லூரி மற்றும் கோபி கலை அறிவியல் கல்லூரிகளில் சுமார் நாற்பது ஆண்டுகாலம்  கல்லூரி முதல்வராகவும்,தமிழ்ப்பேராசிரியராகவும்  பணியாற்றி தம்முடைய கற்பித்தல் அறிவால்  25 நூல்களுக்கு மேல் எழுதி  தமிழ்த்தொண்டாற்றிய தமிழ்ப்பெருந்தகை மாணிக்கம் ஐயா அவர்கள்

   ’உலக வரலாறு அறிவதற்குமுன் தன் உள்ளூர் வரலாறு அறிவதே அறிவுக்கு  விதையாகும்’       என்ற முற்போக்கு சிந்தனையுடன்,

 நம்ம  சத்தியமங்கலம் வரலாறு பற்றியும் எழுதுவதற்காக  தமிழகமெங்கும் உள்ள அரசு மற்றும் தனியார் ஆய்வகங்கள்,புத்தக பதிப்பகங்கள்

 (இந்தப்பதிவில் அடிப்பகுதியில்  பதிவு செய்யப்பட்டுள்ளது காண்க) 

               என  பல ஆண்டுகள் தேடியலைந்து கடுமையாக உழைத்து தரவுகளைப்  பதிவுசெய்து 170 பக்கங்களில்  

                      ”சந்தனநகரம் சத்தியமங்கலம் வரலாறு ”

           என்ற தலைப்பில் நூலாக எழுதி  கடந்த 2023ஆம் ஆண்டு சத்தியமங்கலம்   ஸ்ரீசுந்தர்மஹாலில் நடைபெற்ற  சத்தியமங்கலம் 6ஆவது புத்தகத்திருவிழாவில்   விதைகள் வாசகர் வட்டம் சார்பாக வெளியிட வாய்ப்பளித்து பெருமைப்படுத்திய தமிழ்ப்பெருந்தகை முனைவர்.இரா.கா.மாணிக்கம் ஐயா அவர்கள்  கடந்த 25-02-2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30மணியளவில் அவரது இல்லத்தில் இயற்கை எய்திய துயரச் செய்தி நம்மை மீளாத்துயரில் மூழ்கடித்து வேதனையுறச்செய்துவிட்டது.  பிறப்பும் இறப்பும் இயற்கையின் நியதி என்ற நிலையான நிகழ்வுக்கேற்ப  இன்று நம்மை விட்டு பிரிந்து சென்ற ஐயா அவர்களின் ஆத்மா நிரந்தரமாக ஓய்வெடுக்கட்டும்.. என தமிழ்வணக்கத்தினை தெரிவித்து ஆறுதலடைவோம்....








சந்தனநகரம் சத்தியமங்கலம் வரலாறு  நூல் எழுதுவதற்கு நூலாசிரியர் அவர்கள் பயன்படுத்திய நூல்கள் விபரம்......







இவை தவிர சத்தியமங்கலம் பற்றிய விபரங்களறிந்த சமூக அக்கறையாளர்களிடமும் விபரங்கள் சேகரித்து பதிவுசெய்து பெருமைசேர்த்துள்ளார் நூலாசிரியர் மாணிக்கம் ஐயா அவர்கள்.....

என்றும் நன்றியுடன்,
சத்தியமங்கலம் விதைகள் வாசகர் வட்டம்,



20 அக்டோபர் 2023

கோபி- ஹைதர் காலம் திரைப்படப்பாடல்கள் பதிவகம்-

 மரியாதைக்குரியவர்களே,

வணக்கம்.தங்களை  கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்....எழுத்துப்பிழைகளை பொருட்படுத்தாமல் தகவல்களை மட்டும் எடுத்துக்கொள்ளுங்க ...




































மரமா? மக்களவை உறுப்பினரா??

 அனைவருக்கும் வணக்கம்.      நீலகிரி த்தொகுதி 19-04-2024 வெள்ளிக்கிழமை இன்று 18வது மக்களவைத்தேர்தலில் வாக்களித்துவிட்டு மூன்றுமரக்கன்றுகளையும...